பிக்பாஸில் சம்பள பாக்கியா? – நடிகை கஸ்தூரியின் பதிவும், விஜய் டிவியின் பதிலும்

கடந்த ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற நடிகை கஸ்தூரிக்கு இன்னும் சம்பள பாக்கி இருப்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஷோக்களில் பிக்பாஸும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் இரு தினங்களில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், சீசன் மூன்றில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி விஜய் டிவி தனக்கு சம்பள பாக்கி தரவில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ‘விஜய் தொலைக்காட்சிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே மனுமிஸ்ஸின் குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். நான் உங்களது பொய்யான வாக்குறுதிகளை நம்பவில்லை. எனினும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஜய் டிவி நிர்வாகம் பிக்பாஸில் கலந்து கொள்பவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் அதன்படி நடிகை கஸ்தூரி க்கு கடந்த டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவரது ஜிஎஸ்டி பொருந்தாத காரணத்தில் அது மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் உரிய ஆவணங்களை கஸ்தூரி வழங்குவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பொய்யை நிஜமென்று நம்ப வைப்பது விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதல்ல எனவும் தனது சம்பள பாக்கிக்கான காரணம் என தற்போது ஒரு புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version