நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ்- அக்ஷய் குமாரின் ‘அத்ரங்கி ரே’?

தனுஷின் மூன்றாவது பாலிவுட் திரைப்படமான ’அத்ரங்கி ரே’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ திரைப்படத்தின் மூலம் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார் தனுஷ். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராய் இருக்கும் நிலையில், ‘அத்ரங்கி ரே’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அக்‌ஷய் குமார் அளித்தப் பேட்டியில், நேரடியாக ‘அத்ரங்கி ரே’ படத்தை ஓடிடியில் வெளியிட பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துடன் படத்தினை வெளியிட இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version