‘எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 4 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடும்ப திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது இப்படத்தை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு இன்று (நவ.19) வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் வலுப்பெற்று வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திரையரங்குகளை சூரையாடுவோம் என குறிப்பிட்ட குழுவினர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version