எனது தந்தையை இழந்து நான் நின்ற 16 வயது நியாபகம் வருகிறது… மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை மூலம் வெள்ளித் திரைக்கு என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. 100 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது.

தற்போது அயலான், டான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகவுள்ளார். அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவரது அண்ணன் சிவராஜ் குமார் மற்றும் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், புனித் அவர்கள் தனது டாக்டர் படத்தினை குறித்து தனது மனைவி மற்றும் மகள் இடம் மிகவும் பாராட்டி பேசியதாகவும் தன்னை மிகவும் சிரிக்க வைத்த திரைப்படம் என பாராட்டியதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு புனித்அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் பொழுது பெங்களூருக்கு வந்தால் கண்டிப்பாக தனது வீட்டிற்கு வர வேண்டுமென நான்கைந்து முறை அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ்குமார் அவர்களது குடும்பத்தினரை தற்பொழுது பார்க்கும் பொழுது தன்னுடைய 16 வயது ஞாபகங்கள் வருவதாகவும் அப்போதுதான் தனது தந்தையும் காலமானதால் தாங்கள் எவ்வளவு துயரத்தில் இருந்தோம் என்பதை தற்பொழுது புனித் அவர்களின்குழந்தைகள் வாயிலாக அறிய முடிகிறது எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதன் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version