கலைத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷிற்கு அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும் போது, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரையும், பிரதமர் மோடியையும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் இந்த சந்திப்பின் போது இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி எனத் தெரிவித்து புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.