மனப் ‘பாங்கு’

– ராஜ்குமார் ஜெயந்தரா

பரமேஷ் என்னும் எனக்கு, எந்த ஒரு புராதான திருத்தலம் சென்றாலும் ஆன்மிகமான ஒரு உள்ளதிர்வை ஏற்படுத்தவேண்டும். இதுநாள் வரை ஏதாவது ஒன்று அவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. சிவ பெருமான் மகிழ்ச்சியாக கண்டு களிக்கவேண்டும் என்பதற்காகவே உண்டாக்கியதாக சொல்லப்படும் காசி நகருக்கு வந்து 12 மணிநேரம் கடந்த பின்னும், அதுபோல் ஏதும் வரவில்லை.

தரிசன பயணத்தைக் குறைத்து மதிப்பிட்டு தசஸ்வமேதகாட்டில் இருந்து விடைபெறும் தருவாயில், தடுத்த அந்த ஊர் ஸ்டில்ஸ் ரவி… எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து, வாங்கிய காசுக்கு மேல் நன்றாகத் தான் எடுத்திருக்கிறார் என்று ஆச்சரியம் இரைத்து… ரிக்ஷா பிடிக்காமல் ஹரம்லால் கடைக்கு நானும் பள்ளித் தோழனும் வந்தோம்.

எங்கப் பாரும் பொது ஜனம் புனித நகரை குப்பையால் குளிப்பாட்ட, ரெண்டு சக்கர வண்டியில் அள்ளிச்சென்ற வண்ணம் சுகாதாரத்தை சமநிலையில் வைக்க ராப்பகல் பாராது போராடிக்கொண்டிருந்தனர், தூய்மைப்பணி செய்வோர்.

‘பாங் கி தண்டாய்’ நண்பன் கேட்டவுடன் அருகில் உள்ள என்னையும் பார்த்தான் கடைக்காரன். ‘தோ’ என்றவனிடம் ‘லைட் மீடியம் ஸ்டிராங்’. பித்த ஒடம்புடா எனக்கு லைட்டே சொல். ‘யுல்ல்ல்ல்’ அவன் மகிழ்ச்சிக்கு ஈடு. அருகில் பானம் உறிஞ்சிய ‘அனுபம் கேர்’ சாயல் அரைமட்டை மனிதர் யுல்லுக்குதறியவாறு நரி வருதென்று இந்தியில் பயந்தான். சின்ஸ் 1901, உள்ளே பழைய படம் பத்தி, மாலை சகிதமாய். விற்பனைக்காக சொந்த சரக்கான பாதாம் மிக்ஸ் டப்பாக்கள். அருகிலே காலியாகும் கிளாஸ்களைக் கழுவி சாக்கடையில் ஊற்றும் வயதான வேலையாள். அடங்காத கூட்டம். ஸ்டீல் குடுவையில் இருந்து எடுக்கப்பட்ட கஞ்சா அரவை. இடையே யாசகம் கேட்ட நடுத்தர வயதுப் பெண். முதலாளி பாதாம் பாலை அருமையாக கலக்கி எனக்கு ஒரு தேக்கரண்டி, நண்பனுக்கு இரண்டு. எருமை மாடு கழனித் தண்ணிக்கு ஏங்குவது போல் பார்த்தான். நான் பர்ஸை எடுக்கும் முன் நகர்த்தவளை என் பத்துரூபாய் தாள் அணுகி, இங்க லீக்ல் டா, அடி. தயங்கி நின்ற நான். சிவப்பிரசாதம் பாழாக்காத ஸம்போ மஹாதேவா. லேசாக சுவைத்தேன். தெய்வீக மூலிகைச் சுவை. அவன் கோப்பையில் சிறிது அதீத பசுமை கண்டது.

போதையாவது மானாவாவது ஒன்றுமே ஆகவில்லையே. காசி, பாங்கு பால் – மீண்டும் குறைமதிப்பீடு. அன்றைக்கு சிவராத்திரி. தலைக்கு மேல் கதிரவன். ரிக்‌ஷாவில் ஏறி பாதி தூரத்தில் செல்கையில் காலை 9 மணிக்கு திறவாமல் மூடியிருந்த கடையில், அப்போது இளசுகள் கூட்டம் அள்ளியது. ஒன்னுமே ஆகலடா என்ற நான், அப்போ கோலி வாங்கலாம் என்று அவன் வெறும் 80 ரூபாயில் மைய அறைத்த 4 பாங் கோலி வாங்கி, அருகிலிருந்த லஸ்ஸி கடையில் மசாலா லஸ்ஸி வாங்கினோம். என்ன அடர்த்தி அட அட அட. இதில் பாங் கலந்து குடிக்கலாமா என்று கடைப்பையனிடம் கேட்க, அவன் சின்ன முதலாளியைப் பார்க்க அவன் கோபமாக என்னிடம் ‘பதா நெய்’ என்றான்.

விடுதி வந்த சிறுநீர் கழிக்காமலே கூட அதை விட அவசரமாய் ஜாயிண்டை உருட்டினான். நேற்று நகர எல்லையில் 550 ரூபாய்க்கு வாங்கியிருந்தான். நான் என் வேலையைப் பார்த்தேன். டிரான்ஸ் என்னும் இசையை ஒலிக்கவிட்டு ரசித்து உருட்ட ஒரு கோலியில் முக்கால் பாகத்தை மசால் லஸ்ஸியில் கலக்கி, மன்னிக்க பாங் கரையெவில்லை புனித நதியில் கொஞ்சம் கிளாசில் ஊற்றி பாங்கை போட்டு விரலால் கலக்கி மிக்ஸ் செய்து கொடுத்தேன். அடித்துவிட்டு ஜாய்ண்டை 2 வழி வழித்து லைட்டா என்றான். பாடல் வேகமெடுக்க எனது லஸ்ஸியில் பாதி கோலியை கரைத்து மீதி தவறியது. சரியென்று குடித்து. ஒன்னுமே ஆகலடா. சொக்கும்படி ஆனதால் படுக்கையில் ஒருக்கலித்து பாங்கு பால், பாங்கு லஸ்ஸி 2 ஜாயிண்டென்று மனித பட்டியலில் சேராத ஜந்துவிடம் மெதுமெதுவாய் மிதப்பது அறியாமல் தர்க்கம் செய்தவாறு ‘சிவராத்திரிடா சாயமாட்டேன்’ கவலையுராதே என்றேன்.

ஒரு கட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே அது உனக்கு சரியென்று எப்படித் தெரியும் என்று மெய்த்தேடலாய் பேசியபடியே சிரிப்பு அதிகமாகியபடியே சென்றது.

‘உனக்கு ஏறுதுடா’

‘ஆமா டா ஆரம்பிக்குது . உனக்கு எப்படித் தெரியும்’

‘சொல்ல மறந்துவிட்டேன்… இன் ஃபேக்ட் உன்னை ஏமாத்திட்டேன்.

கஞ்சாவை புகைத்தால் உடனே ஏறும்… ஆனா உட்கொண்டால் லேட்டாதான் ஏறும்… நான் மெய்மறந்து சிரித்தவாறு, அது உனக்கு எப்படித் தெரியும்’

டேய் உனக்கு என்னவோ ஆய்டுச்சு. என்னைப் பயங்கொள்ள செய்து செய்யக்கூடாத தவறை செய்தான். மதி இழக்கிறேனென்று நம்ப ஆரம்பித்து முழுமையாக நம்பினேன்.

நெஞ்சுக்கூட்டுக்குள் யாரோ அமர்ந்து ஜெம்பே அடிப்பது போலிருந்தது. பயத்தின் எவரஸ்டிலிருந்தேன். ‘மச்சா இதயம் வேகமா துடிக்குது. டாக்டரக் கூப்பிடு.’ அவனுக்கு பாஷை தெரியாது என் அரைகுறை இந்தியை வைத்துதான் பனாரசில் சமாளித்துக் கொண்டிருந்தோம்.

அட்டாக் என நம்பி இடக்கையை மட்டும் நீட்டி மார்பை நோக்கி பம்பு செய்து கொண்டேயிருந்தேன். எப்போதோ படித்தது மேலெழுந்தது. கண்டு ஆடிப் போய்விட்டான். அவனுக்கு இது என்னவென்று தெரியும், எனக்கு ஒரு வாரம் கழித்து கூகிளின் மூலமாகத்தான். பேனிக் அட்டாக். என்னிடம் ‘நீ நார்மலா இருக்கடா, பாரு வேர்கல’ புரிய வைக்க முடிவுசெய்தான். கேட்கவில்லை. பயத்தின் உச்சம் சென்றேன்.

அவன் அசுர போதையை இழக்கவைத்தேன். தொட்டு பார் வேகமா துடிக்குது. அவன் வருங்கால மனைவிக்கு தகவல் அனுப்பியவண்ணம் இருந்தான். ஓர் வரி கண்டேன், பாவம் அவன் பேட் டிரிப். ‘எனக்கு கூட இதுமாறி ஆகிருக்கு டா’. புரியவைத்தான் ஏற்கவில்லை. நான் அறையை விட்டு ஓடினேன். எண்ணங்களை எனக்கு முன் கண்டேன், அதில் ஒன்று கடைசி வரை இப்படித்தான் இருப்போமா. இல்லை இன்றே கடைசி சாட்சியா. ‘கம்பெனி இன்ஷுரன்ஸ். அம்மாக்கிட்ட ஸாரி சொன்னேன்னு சொல்லிடு. மணிகர்னிகாகாட் எரித்திடு’

‘நீ என்ன கொன்னுடுவ மச்சா. வேகமாக ஓடி நின்றேன்.’ இவ்வளவும் கையை பம்பு செய்தவாறே. ஏதேச்சையாக சத்தம் கேட்டு தலையே நீட்டிய இளைஞன், என்னைப்பார்த்துப் பதறி கதவை இழுத்து டொம்மென்று சாத்திக்கொண்டான். வளர்ச்சி குறைந்து தென்பட்ட ரூம் பாயிடம் ஆஸ்பத்திரி வழி கேட்டேன். அருகிலில்லை என்றான். படியிலே ஓடினேன். வெளியே வந்தப் பின் சிறிது இயல்பானேன்.

வா நாம போட்ல போலாம் சரியாகிடும் என்று இயல்புபடுத்த அழைத்தான். உள்ளே சென்று அவன் வெளியே வர நெடுநேரமானது. எண்ணக் கற்றைக்களை அடக்க முடியாதது கண்கூடாகத் தெரிந்தது. ஆம்புலன்ஸ்காரன் போனை எடுத்தான். நெருக்கடி சந்து வர 40 நிமிடம் ஆகும். அவன் வேண்டாமென்றான். ஒரே சமயத்தில் 3 எண்ணங்கள்… அதிலொன்று ‘நான் மீளாவிட்டால் என்னை எப்படி ஏற்பார்கள், என்ன சொல்லி புரியவைப்பேன். பித்தனென்றா???’

இயல்பு நிலை வந்தேன். திரும்பி வந்தவன் மகிழ்வுற்றான். என்னை வீடியோ படமும் எடுத்தான். என்னடா இப்படி இருக்குது.
‘அப்பிடித்தான் இருக்கும் சொன்னேன்ல ஒன்னும் இல்ல..’

‘என்ன பேசவிடாத’ நொறுங்கி நின்றான். மறுபடியும் வேதாளம் ‘ஹார்ட் பீட் கேக்குது டா. பழைய படி ஆகுது.’

இப்படிதாடா பிலக்ச்சுவேட் ஆகும் நீ… ‘என்ன பேசவிடாத’ தள்ளாத நிலையிலும் என்னை நானே இயல்புநிலைக்கு கொண்டுவர போராடிக் கொண்டிருந்ததேன். பழையது கிளம்பி அழ வைத்தது. என்னென்னவோ தோன்றுகிறது.’ எதையும் எடுத்துக்கொள்ளாதே… கடைக்காரரிடம் கேட்டேன் உதவியில்லை.

சாலை வந்து மப்பில் உள்ளவனைப்போல் தடுமாறி நடந்தேன். ‘ஓ அந்தளவுக்கு ஆய்டுச்சா’, என்று தாங்க வந்தவனிடம் விலகி மேலும் வேகமாய் முன்னே சென்றேன். ஒடிய பங்கு ஆட்டோவை நிறுத்தி மருத்துவமனைக்கு வழி கேட்டேன். அவன் காதலிக்கு கைகளில் பேசிக்கொண்டே வந்தான்.

இயல்பானேன். ‘ரொம்ப பயமா இருக்குடா. போய்ட்டு போய்ட்டு வருது.’

‘சரியாகிடும் பரம்’. மீண்டும் இதயம் வேகமெடுத்தது. கண்டிப்பாக ‘மருத்துவமனை போலாம்டா’ என்று அவனிடம் கெஞ்சினேன். ‘நீ வேற எனக்கு எல்.எஸ்.டி தரதாயிருந்து கொல்லப்பாக்குறியா. அருகிலே போலீஸ் ஜீப் நின்றது. கேட்டுவிட்டதோ என நண்பன் தெறித்து வந்து அடக்கினான். நீ என்ன கங்கையில் தள்ளி கொல்லப் பாக்குற. வேகமாய் நகர்ந்தேன்.

அடுத்த 2 நாளில் பிரதமர் வர இருந்ததால் எங்கும் மத்திய போலீஸார். நீ என்ன ஹாஸ்பிடல் கொண்டு போகலன்னா நா மிலிட்டரிக்கிட்ட..

அவர்களை நோக்க எத்தனித்து தமிழிலே ‘சார் என்ன இவன்…’ என் கையைப் பிடித்து இழுத்தனைத்து இயல்பாக கடந்தான்.
‘உன்ன சமாளிக்க நான் அடிச்சே ஆகனும்.’ ஜங்கம்வாடி சிக்னலை வேகமாக கிராஸ் செய்தேன். பின்னாலே அவனும்.

என்னை நிற்க வைத்து அவன் மீண்டும் ஒரு தண்டாய் குடித்தான் இம்முறை ஸ்டிராங்.

எதுவும் குடிக்காமல் பிரமை குறையாத நிலையிலேயே இருந்தேன்.

இன்னொரு யாசகி காசு கேட்டாள் 50 ரூபாயை கொடுத்த என்னிடம், ஒரு வடக்கத்தான் இது போல் அவர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று என்னிடம் தான் பேசினான். ஒன்றும் ஏறவில்லை.

நடுவில் ஓட்டமெடுத்தேன். ஒரு லோக்கல் லஸ்ஸி கடையில் நின்றேன். என்னைப் பார்த்து நண்பனிடம் விசாரித்தான். அவன் ஒன்றுமில்லை என்று என்னை இழுத்தான்.

‘மச்சா இவரிடம் சொல்லி என்னை காப்பாற்றுடா..’

‘சும்மாயிருடா சரியாகிவிடும்’

அவன் பிடியை விட்டு ‘பையா மதத் கரோ பையா. பாங் சாப்பிட்டு ஹார்ட்பீட் தோட்த்தா’ அரைகுறையாய் புரியவைத்தேன்.

‘அது ஒன்னுமில்லை பாய். எனக்குக் கூட இப்படி நடந்திருக்கிறது. சரியாகிவிடும்’ என்றார்

நம்பிக்கைப் பிறந்தாலும் ‘ஹாஸ்பிடல், டேப்ளட் பையா’ என்று கெஞ்ச…

என்னை அமரவைத்தி அடர்ந்த லஸ்ஸியில் எலுமிச்சை பிழிந்து உப்பு கலந்து சாப்பிடக் கொடுத்தார்.

உள்ளே இறங்க இறங்க ஓரளவு தெளிவானேன். ஆனால் உடனடியாக வேலைசெய்தது. காசு வாங்க மறுத்தார். பர்ஸிலிருந்து இப்போது மெய்யுணர்வுடன் 100 ரூபாய் கொடுத்து, நடுசாலையில் அவன் காலைத் தொட்டேன்.

பிறகு எங்களிடம் ‘சீப்பா தருகிறோம் என்று மத்திரையெல்லாம் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏக் பார் டிரை நை கரோ.’

‘நானும் அதேதான் சொன்னேன் என்ன மட்டும் நம்பாத.’

போடா… உன்ன மீறி அந்த மனுஷனால தான் உன்கூட இப்போ பேசிட்டு இருக்கேன். 70 சதம் ஓகே. ஆனா வேற மாதிரிடா மச்சா.

‘முழுசா சரியாகிடும். உனக்குள் இருக்கற நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே தான் உன் வாழ்க்கையே மாறப் போகுது. மகத்தான சாதன பண்ண ஸ்டீவ் ஜாப்ஸ், ஜுகம்பர்க்னு பலர் இத தாண்டியதால் மட்டும்தான்.

சரி போட் ரைடு ?

‘நாளைக்கு காலைல போலாம்’ ‘அப்பாடா நீ 90 சதம் வெளிய வந்துட்ட.’

காலையில் இறுமாப்போடு நான் வணங்க மறுத்த நிர்வாண சாம்பல்மேனி காலடியில் 10 ரூவாய் வைத்தேன். அகோரி பட்டையடித்தார்.

மீண்டும் ரவி புகைப்படங்களாய் எடுத்து தள்ளியபின், இடம்பிடித்து அமர்ந்து கங்கார்த்தியை கண்டு சிலிர்த்த போது ‘பரமன்னா எங்கருக்க? சேஃப்பா நீ?’ காடு மலைக்கடந்து எதையோ கண்ட தங்கையின் குறுந்தகவல்.

‘சிலிர்த்துக் கொண்டிருக்கிறேன்’

– கதைப் படிக்கலாம் – 76

Exit mobile version