பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

கடந்த மார்ச் 2020 பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ள நாள், இணையதள முகவரிகள் குறித்த தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ((SMS) அனுப்பப்படும்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்”.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Exit mobile version