கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் பல நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவை முதற்கட்டமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பலர், கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு, வதந்திகளை பரப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் கொரோனா தடுப்பூசிகள் குறித்து தனிநபரோ, அமைப்போ அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version