உத்தர பிரதேச கலவரத்தில் உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.50 லட்சம்- சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது இந்த விபத்து மற்றும் வன்முறை சம்பவம் ஏற்பட்டது.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறையுடன் தொடர்புடையவர் இல்லை என்றும்,”என் மகன் அந்த இடத்தில் இல்லை.அங்கு தொழிலாளர்கள் மீது குச்சிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர். அந்த சம்பவத்தின் போது என் மகன் இருந்திருந்தால், அவர் உயிருடன் வெளியே வந்திருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் லக்கிம்பூரில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு சத்தீஸ்கர் அரசு சார்பில் தலா 50 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேஸ் பாஹீல் அறிவிப்பு.

Exit mobile version