இந்தியாவின் இளைய சமுதாயத்தை உலகமே உற்று நோக்குகிறது என பிரதமர் மோடி பேசினார்.
சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி நேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்தார். பின், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்த அவர், இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆராய்ச்சி துறையில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். ( அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவுக்கு பின் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்கினார்)
இதையொட்டி அங்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின், விழாவில் பேசிய மோடி, அனைவருக்கும் வணக்கம், என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் இளைய சமூகத்தை உலகமே உற்று நோக்குகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது. தொழிமுனைவோர் அதிக அளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளைய தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் உள்ளது” என்று கூறினார்.