இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞரை, மனைவியின் கண்முன்னே கொடூரமாகக் தாக்கி ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவிலுள்ள செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ் (25). ஹைதராபாத்தில் கார்கள் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் இவர், அந்த பகுதியில் வசித்து வரும் சையது அஷ்ரீன் சுல்தானா என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடும்பத்தை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்த துவங்கினர்.
இந்நிலையில் நாகராஜ் மனைவி சுல்தானாவுடன் கடந்த புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே நாகராஜ் சென்றபோது, அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் சராமாரியாக தாக்க துவங்கியது.
இரும்புக் கம்பியாலும் கத்தியாலும் சராமாரியாக அவர்கள் தாக்கியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற மனைவி சுல்தானாவையும் அவர்கள் கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிலர், மர்ம நபர்களில் ஒருவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
நாகராஜின் உடலை கைப்பற்றிய காவல்துறை பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கொன்றவர்கள் தன்னுடைய உறவினர்கள் தான் என்று சுல்தானா அடையாளம் காட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ய காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.