கேரளாவில் கணவர் மற்றும அவருடைய வீட்டாரின் தொடர் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஸ்வமயா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா என்கிற இளம்பெண் கடந்த ஜூன் மாதம் சாஸ்தாம்கோட்டா பகுதியிலுள்ள கணவன் வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டார். திருமணம் நடந்து ஓராண்டு காலத்திற்குள் விஸ்மயா தற்கொலை செய்துகொண்டது இந்த வழக்கில் பரபரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கேரள போக்குவரத்து துறையில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராக விஸ்மயாவின் கணவர், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது. 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், விலையுயர்ந்த கார் உள்ளிட்டவற்றை கொடுத்து விஸ்மயா கிரண்குமாரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் காருக்கு பதிலாக, அதற்குரிய பணத்தை பிறந்த வீட்டாரிடம் இருந்து வாங்கி வரவேண்டும் என்று கூறிய விஸ்மயாவை கிரண்குமார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் அடுத்தடுத்து பல்வேறு வரதட்சணை கொடுமை அரங்கேற கடந்த 2021, ஜூன் 21-ம் தேதி விஸ்மயா கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. சமீபத்தில் கணவர் வீட்டில் இனி இருந்தால் தன்னை இனி யாரும் பார்க்க முடியாது எனக்கூறி விஸ்மயா கண்ணீருடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மீண்டும் தாய் வீட்டுக்கே திரும்ப விரும்புவதாகவும், கணவர் வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்லும்படி கூறி விஸ்மயா அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோவும் தற்போது கூடுதல் சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக விஸ்மயாவை கொடுமைப்படுத்தி வந்ததை அவருடைய கணவர் கிரண்குமார் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.