போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட விவகாரம்… மத்திய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு!!

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்து மற்றும் வன்முறை காரணமாக மத்திய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்து விபத்து நடத்தியதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது இந்த விபத்து மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா நிகழ்த்தப்பட்ட வன்முறையுடன் தொடர்புடையவர் இல்லை என்றும்,”என் மகன் அந்த இடத்தில் இல்லை.அங்கு தொழிலாளர்கள் மீது குச்சிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர். அந்த சம்பவத்தின் போது என் மகன் இருந்திருந்தால், அவர் உயிருடன் வெளியே வந்திருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,லக்னோவில் இருந்து லக்கிம்பூர் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த அகிலேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர்.போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து வீட்டு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்திய அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை லக்னோவிலிருந்து லக்கிம்பூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version