நீட் தேர்வு முறைகேடுகள்… நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!

இந்த கல்வி ஆண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில்,உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஹரியானா,டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்காக 25 லட்சம் ரூபாய் வரை சிலர் செலவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பான சிபிஐ விசாரணையில் முறைகேடு நடந்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து, முன்னதாக,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில்,இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி,நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடுமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version