மோடியின் கனவுக்கு வந்த சோதனை!!.. தவிக்கும் டிஜிட்டல் இந்தியா

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு, நீட் தேர்வு முடிவால் மீண்டும் முடங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது டிஜிட்டல் மயமாக்கல். அதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

முன்னதாக பணப்பரிவர்த்தனை செயலிகள் முதல், தற்போது கொரோனா பரவலை கண்காணிப்பதற்கான ஆரோக்யசேது செயலி வரையில் டிஜிட்டல் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு சாதகமாக, இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் கூட, சில சேவைகளின் தரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்பதே உண்மை.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு முடிவுகளை வெளியான தினத்தன்றே பார்ப்பது என்பது இன்றளவும் அரிய செயலாகவே உள்ளது. அதுதான் இந்தியாவில் இணைய வசதிக்கு எந்த அளவில் வலிமையான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்த சூழலில் தான் கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் முடப்பட்ட பிறகு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பு பெரும்பாலும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் தினசரி வருமானமே பாதிக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட் போன் என்பது ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாப் பொருளாகவே மாறியது.

ஸ்மார்ட் போன்கள் கிடைத்தும் பல இடங்களில் இணைய வசதியின்றி மாணவர்கள் குன்றின் மீதும், வீட்டு கூரையின் மீதும், மரத்தின் மீதும் இருந்தவாறும் வகுப்புகளை கவனித்ததை சமூக வலைதளங்களில் நம்மால் புகைப்படங்களாக காண முடிந்தது.

ஆனால், அதற்கும் மேலாக வகுப்புகளை கடந்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தவும் சில பல்கலைக்கழகங்கள் முயற்சியை முன்னெடுத்தன. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகம் நடத்திய தேர்வின்போது, காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதடி என்ற வகையில் இணையதளம் முடங்கி தேர்வே ஒத்தி வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தேர்வின்போது, மோசமான இணைய வேகத்தால் பலருக்கு இணைப்பு துண்டானது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மோசமான இணைய வசதிக்கு யார் காரணம். இதற்கு மாணவர்கள் தான் பலியாக வேண்டுமா?.

இந்நிலையில், வழக்கமாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்படும் நீட் தேர்வு முடிவுகள், இந்த முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும், ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவுகளை முயன்றதால் இணையதளம் முடங்கியது. சுமார் 2 மணி நேரம் ஆகியும் இணையதளம் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

பணப்பரிவர்த்தனை செயலிகளான கூகுள் பே, போன் பே போன்றவையும் இதே நிலை தான். பல சமயங்களில் பணத்தை சரியாக செலுத்த முடியாமல் முடங்கி வாடிக்கையாளர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது.

மோசமான உட்கட்டமைப்பின் காரணமாக நாட்டின் இணைய சேவையின் நிலை இப்படி இருக்க, பிரதமர் மோடி அறிவித்த பல புதிய இந்தியாக்களில் முக்கியமானதாக கருதப்படும் டிஜிட்டல் இந்தியா எனும் கனவு என்று நினைவாகுமோ?…

Exit mobile version