ஓலா தயாரித்துள்ள 1441 மின்சார வாகனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு மின்சார வாகனங்களை மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு புதிய நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் வாடகை கார் துறையில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் மின்சார ஆற்றலில் இயங்கும் இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் எஸ்.ஒன் மற்றும் எஸ்.ஒன்.ப்ரோ மாடல் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.
சமீபத்தில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இந்த புதிய மாடல் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார் பவீஷ் அகர்வால், ஓலா நிறுவனம் குறிப்பிட்ட மாடலில் தயாரித்துள்ள 1,441 மின்சார இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா நிறுவனத்தின் பொறியாளர்கள் பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஐரோப்பிய நாடுகளின் தர நிர்ணயமான இசிஇ 136ன் படி தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.