ஓராண்டை நெருங்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தொடங்கி முழுமையாக 11 மாதங்களை நிறைவு செய்துள்ளதை ஒட்டி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை கையிலெடுத்தனர். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றுடன் 11 மாதங்களை எட்டுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் சங்கமான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடங்கி 11 மாதங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி டேஹ்சில் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல் 2 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் அஜய் மிஷ்ரா டேனி தொடர்புடையவர் என்னும் கருத்தை வலியுறுத்தியும், அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version