உணவு கொடுக்காமல் தந்தையை கொன்ற மகன் கைது

கேரளாவில் உணவு கொடுக்காமல் தாய், தந்தையை பூட்டிய வீட்டுக்குள் சித்ரவதை செய்த மகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி என்ற நபர் அவரது பெற்றோரை வீட்டிலிருந்த அறையில் பூட்டி வைத்ததோடு உணவும் மற்றும் மருந்துகளையும் கடந்த சில வாரங்களாக கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் ரெஜியை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வயதான அந்த தம்பதியரையும் மீட்டுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரெஜியின் தந்தை உயிரிழந்துள்ளார்.

அவரது சாவுக்கு காரணம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெஜியின் தாயார் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய தண்டனைச் சட்டம் 304A கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டமும் ரெஜி மீது பாய்ந்துள்ளது.  தனது பெற்றோருக்கு ரெஜி ஏன் இந்த நரக வேதனையை கொடுத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version