காலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்குவதற்கு தாமதம் செய்த மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பகுது ரபோடி. இங்கு பாண்டூரங் பாட்டீல் (76) என்கிற முதியவர் தனது இரண்டு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். வழக்கமாக காலை தரப்படும் சிற்றுண்டி கடந்த வியாழன்று வரவில்லை.
மூத்த மருமகள் சிற்றுண்டி சமைக்க தாமதம் செய்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டூரங், தனது மருமகளை துப்பாக்கியால் சுட்டார். இதனால் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இளைய மருமகள் ரபோடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர் முதியவர் பாண்டூரங் பாட்டீலை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.