விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் புதிய வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.

இந்தநிலையில் நேற்று மத்திய மந்திரி அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அடுத்த கூட்டத்திற்கான தேதி எதுவும் அரசு நிர்ணயிக்கவில்லை என்று (பஞ்சாப்) விவசாய சங்க மாநில தலைவர்களில் ஒருவரான சுர்ஜீத் சிங் புல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version