உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்ட்டில் தெரு நாய் ஒன்று படுக்கையில் ஓய்வு எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசம் :
உலகமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்னும் முழுவதுமாக வெளியே வந்த பாடில்லை. மேலும், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இறந்துபோன ஒரு சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் காட்சி பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், மொராதாபாத் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் தீன் தயால் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பெண் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வார்டு உள்ளது. அங்கு தெருநாய் ஒன்று வார்டில் உள்ள படுக்கையில் படுத்து கொண்டு இருக்கும் வீடியோ தற்போது சமூகஊடகங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.
Read more – விமான நிலையத்தில் பெட்டியை வைத்து தப்பிச்செல்ல முயன்ற நபர் : வெடிகுண்டு பயத்தில் மக்கள் ஓட்டம்
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளித்தபோது, தெருநாய் அங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை, நாய் இருந்த அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வார்டானது நோயாளிகள் இன்றி காலியாகத்தான் இருந்தது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பில் இருந்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.