30 வயது பெண் போலீஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீமட்ச் எனும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 30 வயதுடைய பெண் போலீஸ் ஒருவருக்கும், அப்பகுதியில் வசித்து வரக்கூடிய ஒரு நபருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக கடந்த ஏப்ரல் மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் சமூக வலைதளங்கள் மூலமாக நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் தனது சகோதரன் பிறந்தநாள் எனக்கூறி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு பெண் போலீசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அந்த பெண் போலீஸ் பிறந்த நாள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், அந்த நபர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீஸ் கடந்த 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த நபரது தாயார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கியமான குற்றவாளியாகிய பெண் போலீஸின் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version