அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை: செயற்குழு 28 ம் தேதி கூடுகிறது

அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28 ம் தேதி கூடுகிறது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த பரபரப்பான நிலையில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிந்தது.

கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளும், அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக நடத்திய அவசர ஆலோசனைகளும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சலசலப்பு ஓய்ந்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து கோஷம் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. வாழ்த்து கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் நேற்றைய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எதிரொலித்து காரசார விவாதம் நடைபெற்றது.இறுதியில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28 ம் தேதி கூட்டப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 28 ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Exit mobile version