வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க தினகரன் அமைத்த குழு!

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் துவங்கிவிட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.


தினகரன் தலைமையிலான அமமுக தேர்தல் பணிகளைத் தொடங்காமல் இருந்து வந்தது. சமீபத்தில் தினகரன் ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னமே சட்டமன்றத் தேர்தலுக்கு அக்கட்சிக்கு கிடைத்தது. இதனால் குக்கரை விளம்பரப்படுத்தும் பணிகளில் அமமுகவினர் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில் அமமுகவின் ஆட்சி மன்றக் குழுவை அமைத்து தினகரன் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பான அவரின் உத்தரவில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க இந்த ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

read more: பாமக: தேர்தல் பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்!


அதன்படி, ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகன் நியமனம் செய்யப்பட்டார். கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் கோதண்டபானி, எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் செங்கோடி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் நபில் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version