விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு..!

டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் விவசாயிகள் தங்களது போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குடும்பத்தினருக்கு அரசு வேலை, வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தநிலையில், விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் தற்காலிகமாக கைவிட முடிவு விவசாயிகள் செய்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லியில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி பேசும் போது, ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் தங்கள் போராட்ட தளத்தில் கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர். நாங்கள் எங்கள் வீடுகளுக்கு புறப்பட தயாராகி வருகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version