திருவள்ளுவர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்குத் தொண்டாற்றுகின்றவர்களையும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு வரலாற்றில் எக்காலத்திலும் இதுவரையில்லாத அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு எண்ணற்ற விருதுகளைத் தோற்றுவித்து வழங்கி வருகிறது. அவ்வகையில் தைத் திங்கள் திருவள்ளுவர் திருநாளில் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 30.09.2020ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். (தொ.பே.எண். 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி: www.tamilvalarchithurai@gmail.com)

திருவள்ளுவர் விருது – 2021 (திருக்குறள் நெறி பரப்புவோருக்கு), மகாகவி பாரதியார் விருது – 2020 (பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு), பாவேந்தர் பாரதிதாசன் விருது 2020- (சிறந்த கவிஞருக்கு) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2020 (சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு), கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – 2020 (சிறந்த தமிழ் அறிஞருக்கு), பெருந்தலைவர் காமராசர் விருது – 2020 (தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு) பேரறிஞர் அண்ணா விருது – 2020 (தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version