பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்தித்து அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரையரங்குகள், சிகை அலங்கார கடைகள், உயிரியல் பூங்காக்கள், ஜிம்கள் போன்ற அனைத்து வகையான வெளிப்புற சேவைகள் அனுமதிக்கப்படும் என்றும் உணவகங்களில் வெளிப்புற பகுதியிலிருந்து உணவுகள் வாங்கிச் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஒத்துழைப்புக்கும், பொறுமைக்கும் மிகவும் நன்றி சொல்கிறேன் என்றும் தங்களின் கூட்டு முயற்சியால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 31 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் 60 சதவீத மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகள் குறித்து மக்கள் சந்தோஷப்பட வேண்டாம் என்றும் மற்ற நாடுகள் சந்தித்து வரும் பாதிப்புகளை பார்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் தடுப்பூசி பணிகள் எவ்வளவு நன்மையை அளிக்கும் என்பது சரியாக தெரியவில்லை என்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் வாரம் இருமுறை பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.