கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது, ஜூன் மாதம் முதல் மருத்துவ குழு ஆலோசனை படி சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது
அந்த வகையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
இதன்படி மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது.
இதில் இந்த ஊடரங்கை மீண்டும் நீட்டிக்கலாமா? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் நாம் எடுக்க வேண்டும்? பொது போக்குவரத்தை தொடங்கிய பிறகு, கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதா? கொரோனா 2-வது அலைவீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னதாக அனைத்து மாவட்ட கலெக்டர்களை அழைத்து காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகுதான், தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தகவல்கள் கூறுகின்றன.