சவுதி அரேபியாவில் நடுக்கடலில் திமிங்கலம் மீது படுத்துக்கொண்டே சவாரி செய்த நபரின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், படகில் சென்றுக் கொண்டிருக்கும் போது, படகிலிருந்து திமிங்கலத்தின் மீது குதித்து, அதன் மீது படுத்து சிறிது தூரம் செல்லும் வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது. சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான யான்பு அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், வரும் நபர், ஸக்கி அல்-சபாஹி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திமிங்கலம் மீது சவாரி செய்யும் நபரின் வீடியோவை, ஆலல்வானி அப்துல்லா என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், படகில் சென்றுக்கொண்டிருக்கும் ஒரு நபர், இரண்டு திமிங்கலங்கள் வருவதைப் பார்க்கிறார். முதல் திமிங்கலம் நெருங்கி வரும்போது, அவர் அதன் முதுகில் ஏற முயற்சிக்கிறார், ஆனால் முடியவில்லை. ஆனால், அடுத்ததாக வந்த திமிங்கலத்தின் மீது ஏறி, அதன் மேல் படுத்து சவாரி செய்கிறார்.
இந்த வீடியோவை இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பலர் இந்த வீடியோவிற்கு, பாரட்டியும் கண்டனம் தெரிவித்தும், கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதுக்குறித்து இந்த வீடியோவைப் பதிவிட்ட நபர், இந்த திமிங்கலத்தின் சராசரி நீளம் 13 மீட்டர் எனவும், அதன் எடை சுமார் 21 டன் எனவும் தெரிவித்துள்ளார். இது செங்கடலில், குறிப்பாக சவுதி கடற்கரைக்கு அருகில் காணப்படுகிற மீன்களில் மிகவும் பொதுவான ஒன்றாகும் என்றும், இது மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது எனவும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.