அரசுமுறைப் பயணங்களுக்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் தமிழக அரசின் ஹெலிகாப்டர், கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதனை மீண்டும் வேறு வழியில் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசிடம் ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412ep ரக ஹெலிகாப்டரொன்று கைவசம் உள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இயக்கப்படாமல் இருக்கிறது. அரசுமுறைப் பயணங்களுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர், இதுவரை 2,449 மணி நேரம் மட்டுமே பறந்துள்ளது. 14 பேர் பயணிக்கக்கூடிய வசதியுள்ள இந்த ஹெலிகாப்டர் பேரிடர் காலங்கள் மற்றும் அவசர பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டதாகும்.
நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த ஹெலிகாப்டரை, ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக சமீபத்தில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தி்ல் விவாதிக்கப்பட்டிருந்தது. அதன்முடிவில் இது தொடர்பாக அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் கொண்ட குழு, இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுத்தனர்.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனை சார்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அரசின் சார்பாக இத்திட்டம் தற்போது 2021-ல் தொடங்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரை இறங்கும் வசதிகள், மருத்துவமனைகளில் அவற்றை இறக்குவதற்கான வாய்ப்புகள் குறித்த திட்டமும் விரிவாக தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.