புதுச்சேரியில் வீட்டினுள் முதியவர்களை வைத்து பூட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முக்தியால் பேட்டையைச் சேர்ந்த துரை (எ) மாணிக்க வாசகம். பில்டிங் கான்ட்ராக்டர். இவர் ’இந்தியா ஆர் எப்’ என்ற தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் கடனை கட்ட தவறியதால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய தனியார் நிறுவன ஊழியர்கள் வந்தனர். காலிங் பெல் அடித்தும் வீட்டை திறக்காததால் பூட்டுப்போட்டு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வெளியூரில் இருந்த துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, காவல் நிலையத்திற்கு போன் செய்த அவர், வீட்டுக்குள் தனது பெற்றோர்கள் இருப்பதாகக் கூறினார். பின் தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்துப் பேசிய காவல்துறையினர் நிறுவன ஊழியர்களுடன் வந்து பூட்டை திறந்தனர். பெற்றோர்கள்2 மீட்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டை பூட்டி நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.