கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சுழி அருகே வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு கோயில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்டு 19 மற்றும் ஆகஸ்டு 20ம் தேதிகளில் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினோம். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை.கோயில் திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்தால் மட்டும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
