பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து டாக்காவுக்கு மேற்கொண்ட பயணத்திற்கு, போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட புதிய அதிநவீன வி.வி.ஐ.பி விமானத்தை பயன்படுத்தியுள்ளார். இந்த விமானம் வாங்கப்பட்டது முதல், தற்போது தான் முதல் முறையாக வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவும் பங்களாதேஷும் தற்போது 1971 போர் வெற்றியின் பொன்விழாவைக் கொண்டாடுகின்றன. 1971 டிசம்பரில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது. இது பங்களாதேஷ் எனும் புதிய நாடு உருவாக வழிவகுத்தது. அதன் 50 ஆண்டு கால பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க மோடி இன்று வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணத்தைக் தொடங்கி உள்ளார்.
இந்த பயணத்தில் பயன்படுத்தப்பட்ட, பதிவு எண் விடி-ஏஎல்டபிள்யு’வைக் கொண்ட பி777 விமானம் போயிங் மூலம் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது.
கால் சைன் ஏ 1 அல்லது ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படும் இந்த விமானம், டெல்லியில் இருந்து இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு, காலை 10.30 மணியளவில் டாக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பதிவு எண்விடி-ஏஎல்வி உடன் மற்றொரு பி777 விமானமும் அமெரிக்க விமான நிறுவனமான போயிங் இந்திய அரசாங்கத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கியது. இந்த இரு அதிநவீன விமானங்களும் நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பி777 விமானங்கள் பெரிய விமான இன்ஃபிராரெட் எதிர் நடவடிக்கைகள் மற்றும் சுய பாதுகாப்பு அறைகள் எனப்படும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன.