இரண்டு தவணைகளாக வழங்கப்படும் எம்.பி மேம்பாட்டு நிதி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

கொரோனா நிதி சுமை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த எம்.பி-களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2 தவணையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

டெல்லி,
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது; அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எம்.பி-களின் வருடாந்திர தொகுதி நிதியை ( 5 கோடி ) நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் கொரோனா சூழல் என்பதால் மத்திய அரசு இதனை ஏற்று கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2021-2022 முடிவு ஆண்டுக்கான நிதியாக 2 கோடி ரூபாய் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்படும். அதேபோல, 2022 முதல் 2026 வரையிலான கால கட்டத்திற்கு ஆண்டிற்கு இரண்டு தவணை அதாவது 5 கோடி ரூபாயை 2.5 கோடி ரூபாய் என இரண்டு முறை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் கிடப்பில் உள்ள அவசர திட்டங்களை நிறைவேற்ற தொகுதி மேம்பாட்டு நிதி வேண்டும் என்றால் துறை சார்ந்த திட்ட அதிகாரிகளிடம் கையெப்பம் பெற்று சமர்பித்தால் நிதி விடுவிக்கபடும் என மத்திய அரசு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version