வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு…

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் என்னும் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சோழம்பேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது கணவர் ஜெயராமன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பச்சையம்மாள், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகிலேயே உறவினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பச்சையம்மாள் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு பச்சையம்மாள் எழுந்து உள்ளார். அச்சமயத்தில் உள்ளே நுழைந்த மர்ம நபர், இவரிடம் செல்போன் சார்ஜர் இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என கூறி அவரை வெளியே போகுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து, அவர் திடீரென்று பச்சையம்மாளை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர், அவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்கச்சங்கிலி காது, மூக்கில் இருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை இழுத்து பறித்துள்ளார். இந்த வழிப்பறி சம்பவத்தில் பச்சையம்மாள் காது, மூக்கு கிழிந்து ரத்தம் கொட்டியதில் மயங்கி விழுந்தார். இதன்பிறகு, சிறிது நேரம் கழித்து பச்சையம்மாளை பார்க்க வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளார். அப்போது, அவர் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version