வங்கிகளில் கடன் தவணை செலுத்தியவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடன் தவணை
மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னாள் தலைமைக் கணக்காயர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையிலான வல்லுனர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், சிறு தொழில் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டு உபயோகக் கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நாளை மறுநாள் 5-ம் தேதி அதன் தீர்ப்பை வழங்கும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கடன்தாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
மானியம்
இந்திய ரிசர்வ் வங்கி கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட லட்சக்கணக்கானோர் கடன் தவணையை தவறாமல் செலுத்தி வந்தனர். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததால், அது பெரும் சுமையாக அமைந்து விடும் என்பதால் தான் அவர்கள் தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கி தவணை செலுத்தினார்கள்.
அவர்கள் தவணையை செலுத்தி விட்டார்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகை வழங்க மறுக்கக் கூடாது.
அவ்வாறு செய்தால், அது அவர்களின் நேர்மைக்கு வழங்கப்பட்ட தண்டனையாக அமைந்து விடும். எனவே, அவர்கள் வட்டிக்கு வட்டியாக அவர்களுக்கு எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமோ, அந்த தொகையை அவர்களுக்கு மானியமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,