திருச்சியில் இயங்கி வரும் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ₹.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில், BIS சட்டம், 2016-ன் விதிகளை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS), கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இயக்குநர் ரினோ ஜான் மற்றும் இணை இயக்குநர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், BIS தரநிலை முத்திரை இல்லாத பல்வேறு கட்டாய ISI தயாரிப்புகள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
மின்சார மற்றும் மின்சாரமற்ற பொம்மைகள், குடிநீர் பாட்டில்கள், வீட்டு உபயோக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குடுவைகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், மின்சார உணவு கலக்கிகள் என ₹.5 லட்சம் மதிப்பிலான இப்பொருட்கள் விதிகளை மீறியதற்காகக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் தலைவருமான ரமேஷ் தெரிவிக்கையில், BIS சட்டம், 2016-ன் விதிகளின்படி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், BIS சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் படி, இக்குற்றத்திற்கு முதல் முறை மீறலின்போது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைஅல்லது ரூ.2,00,000-க்கு குறையாத அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.