ஆற்றங் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அடையாறு, கூவம் நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மறுசீரமைப்பு  திட்டங்களின் மூலம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் மீண்டும் புற்றீசல் போல பெருகி வருவதாகக் கூறி, எட்டு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, நீர்வள ஆதாரத்துறை, குடிசை மாற்று வாரியத்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், இப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக  தலைமைச்  செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதேபோல ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு மற்றும் திருவேற்காடு ஆகிய இடங்களில் கூவம் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, அப்பகுதிகளில் வசிப்பவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுத்து, கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version