நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் குரங்குசாவடி அருகே நரசோதிபட்டி ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன்கள் அன்பழகன், கார்த்திக் இவர்கள் இருவரும் மர அரவை மில் வைத்து நடத்தி வந்தனர். இதில், அன்பழகனுக்கு புஷ்பா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

அன்பழகனின் தம்பி கார்த்திக்குக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சர்வேஷ் (12 வயது ), முகேஷ் (10 வயது ) என்ற 2 மகன்களும் இருந்தனர்.இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் உணவு அருந்திவிட்டு அவரவர் அறையில் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு வீட்டில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் முதல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, இவர்களது மகன்களான சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேசமயம் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், டி.வி. வைக்கப்பட்டிருந்த அலமாரியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யை குடும்பத்தில் அனைவரும் இரவு 11 மணி வரை பார்த்துள்ளனர் ஆனால் டி.வி.யை சுவிட்ச் ஆப் செய்யாமல் அனைவரும் தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு டி.வி. வெப்பம் தாங்காமல் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. டி.வி.வெடித்து சிதறியதில் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. எந்திரத்திலும் தீ வேகமாக பரவியுள்ளது.

இதனால்தான் கரும்புகை வீடு முழுக்க சூழ்ந்திருந்த காரணத்தால் அறையை விட்டு யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரும், அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகியோரும் மூச்சு திணறியும், உடல் கருகியும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் அன்பழகனின் மகன் ஜெயக்குமார், மகள் சவுமிதா, உறவினர் மல்லிகா, அன்பழகனின் தந்தை பாலன், தாய் அமுதா ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version