சசிகலா முன்கூட்டியே விடுதலை அடைவாரா… அவரது வழக்கறிஞர் முக்கிய தகவல்!!!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியநிலையில் மேல் முறையீடு செய்ததில் தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக உச்ச நீதி மன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனை யடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் வரும் ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனிடையே சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தினால் சசிகலா வருகிற ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், தவறும் பட்சத்தில் மேலும் ஓராண்டு காலம் அவர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றும் சிறை நிர்வாகம் பதிலளித்ததுள்ளது.

இந்தநிலையில் சசிகலா தரப்பில் அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட தனிக்கோர்ட்டு, அபராதம் செலுத்தப்பட்டது குறித்து பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து, சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளார்.

அவர், கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகை காலத்தை அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர்கள், பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிக்கும்படி கூறியதை தொடர்ந்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று முதன்மை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். இந்த மனுவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் முதன்மை சிறை கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார்.

சசிகலா விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Exit mobile version