டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மதிரெட்டிபட்டி சேர்ந்தவர் குழந்தைவேல். விவசாயி. இவருடைய மனைவி அமுதா. இவர்களின் மகன் அஸ்வின் (6), மகள் காவியா (4). தந்தை குழந்தைவேல் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தாய் அமுதா தனியே இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் சிறுவன் அஸ்வினுக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அஸ்வினுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.