ஆற்றில் சிக்கிய யானை.. காப்பாற்ற சென்ற படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்!!

ஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

ஒடிசாவில் பாய்ந்து வரும் மகாநதி ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், யானை ஒன்று நடு ஆற்றில் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், படகின் மூலம் யானையை மீட்க முயன்றனர். அப்போது, சம்பவங்களை அருகில் இருந்து புகைப்படம் எடுக்க இவர்களுடன் உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரும் உடன் சென்றிருந்தார்.

யானையின் அருகே படகு சென்ற போது, அதில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்தனர். அப்போது, இவர்களைக் கண்டு அச்சப்பட்ட யானை, ஆக்ரோஷமாக செயல்பட்டது. இதனால், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். வனத்துறையினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பத்திரமாக கரை திரும்பிய நிலையில், பத்திரிக்கையாளர் மட்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version