விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல மாற்றம்..இன்று வீடு திரும்புகிறார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா ஆகியோர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், லேசான அறிகுறிகளுடன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில், “தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவக் குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு, கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சை நல்ல ஒத்துழைப்புக் கொடுத்ததன் மூலம், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

6 மாதத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு விஜயகாந்த் சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தே.மு.தி.க தரப்பில் கடந்த செப்டம்பர் 24-ல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததாகவும், பின்னர் குணமடைந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் பிரேமலதா தெரிவித்தார்.

Exit mobile version