8 பேரின் நிலை என்ன..? விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்..!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார் சத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பூந்தமல்லியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாதத் தன்மை கொண்டதாக மாறியதால், பல பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என பல இடங்களில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து பலரும் திரும்பிய நிலையில், 8 பெண்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் தேங்கி வரிசையாக நிற்கிறது. இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சமரச முடிவு எட்டப்படவில்லை. இதனால் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

Exit mobile version