அவள் திருமண வயதை எட்டிய ஒரு இளம்பெண். ஒவ்வொரு பெண்ணும் தன் கல்யாண வயதை அடையும் நேரம் தன் வருங்கால கணவனைப் பற்றி பல எதிர்பார்ப்புக்களை வைத்திருப்பாள். அப்படி அவளும் தன் வருங்கால கணவரைப் பற்றி சில எதிர்பார்ப்புக்களையும் ஆசைகளையும் வைத்திருந்து காத்திருந்தாள். அவளுக்குப் பொதுவாக பாட்டுக் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.
எல்லோரும் பயணத்தின் போது பேசிக் கொண்டிருப்பர்கள்; ஆனால் அவள் மட்டும் ஜன்னலோர இருக்கையை சண்டையிட்டுப் பிடித்துக்கொண்டு , காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு அவள் கேட்கும் இசைக்கு ஏற்றார்போல் மரமெல்லாம் அசைவதுபோல் கற்பனை செய்து கொண்டு பயணம் செய்வாள். அப்படி ஒரு இசைப்பிரியை அவள்.
அவள் தோழிகள் எல்லோரும் அவளை, “எப்போது பார்த்தாலும் காதில் அந்த ஹெட்செட்டை மாட்டிக் கொள்கிறாய், அப்படி அதில் என்னதான் உள்ளதோ?” என்று கேலி செய்த வண்ணமே இருப்பார்கள். ஆனாலும் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ள மாட்டாள்; எப்போதும் இளையராஜாவின் இசைமழையில் நனைந்து கொண்டே இருப்பாள் அவள்.
அவளுடைய வருங்காலக் கணவரும், அவளைப் போல் இசையில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ஒரே ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு, ஒரே பாட்டினை அவளும்,அவள் கணவரும் சேர்ந்து கேட்டுக்கொண்டு அப்படியே ஜன்னல் வழியாக வரும் இயற்கை காற்றை ரசிக்க வேண்டுமென்பன போன்ற பல கனவுகளைக் கொண்டிருந்தாள் அவள்.
என்னதான் குடும்பத்தினருடன் ஜாலியாக தியேட்டரில் போய் சினிமாவைப் பார்த்தாலும் ஏதோ ஒருவிதமான வெறுமையையே அப்போது உணர்ந்தாள் அவள். அப்போது அவள் தன்னுடைய மனதிற்குள்,’ தன் வருங்காலக் கணவருடன் கலகலவென அரட்டை அடித்துக் கொண்டு, என்ஜாய் பண்ணிக் கொண்டு சினிமாவை ஜாலியாக ரசித்துப் பார்க்க வேண்டும்‘என்ற ஆசையையும் புதைத்து வைத்துக் கொண்டாள்.
அவள் தனியாக கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும்; “திருமணத்திற்குப் பின் தன் கணவரின் கைகளைக் கோர்த்துக் கொண்டு தினமும் ஜோடியாகக் கோவிலுக்கு செல்ல வேண்டும்” என்றவொரு ஆசையும் அவளின் மனதில் வேரூன்றியது. இப்படி பல ஆசைகளோடும், எதிர்பார்ப்புகளுடனும் காத்திருந்த அவளுக்குத் திருமணம் என்ற பொன்னாளும் வந்தது.
ஆம்! அவள் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தனர், மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து விட்டது, மாப்பிள்ளைக்கும் அவளைப் பிடித்தது. அதற்குப் பின் என்ன? ஊரார் முன்னிலையில் இருவருக்கும் திருமணமும் இனிதே நடந்தேறியது.
திருமணமான புதிதில் ஒருநாள் அவள் தன் ஆசைக் கணவருடன் சேர்ந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைஆசையாக அவளுக்குப் பிடித்தவொரு அழகான பட்டுப்புடவை அணிந்து கொண்டு, அவளுக்கு மட்டுமல்ல அனைத்துப் பெண்களுக்கும் பிடித்த மல்லிகைப் பூவினைத் தலைநிறைய வைத்துக் கொண்டு அவள் தன் கணவன் முன் போய் நின்றாள். ஆனால் அவள் கணவரோ, அவளைப் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானார்!.
“என்னடி இது புடவை, பூவெல்லாம் வச்சிக்கிட்டு இப்படி வந்து நிக்கற, வேற எதாவது சிம்பிளா ட்ரெஸ் பண்ணியிருக்கலாம்ல?” என்று திட்டினார். “ஏங்க இந்த புடவை நல்லாதானே இருக்கு? ஏன் இப்படி சொல்றிங்க?” என்று அவள் கேட்டாள். உடனே அதற்கு அவன் “நல்லாதான் இருக்கு, பட் கம்ஃபர்ட்டபுளா இருக்காதுல்ல அதான் அப்படி சொன்னேன்,சரி உன்னோட இஷ்டம்” என்று சலிப்பாக சொன்னார்.
அவளுக்கு அவனின் இந்தப் பேச்சைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. “அவருக்குப் பிடிக்கும் என்று நினைத்து புடவை, பூவெல்லாம் வைத்தால் இவர் என்னடானா இப்படி சொல்லிட்டுப் போறாரே?? என்ன ரசனையொ?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள். அதற்குப் பின் ஒருநாள் தன் கணவனின் கைகோர்த்துக் கொண்டு கோவிலுக்குப் போகலாம் என்ற ஆசையில் “ஏங்க வாங்க இன்னிக்கு கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்” என்று தன் கணவரை அழைத்தாள்.
ஆனால் அவனோ,”கோவில் பக்கத்துலதான இருக்கு நீயே போய்ட்டு வா; எனக்குக் கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது” என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டான். அதைக்கேட்டவுடன் அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. தன் கணவனின் கைகோர்த்துக் கொண்டு கோவிலுக்கு செல்லலாம் என்று ஆசையாக அழைத்தால், இப்படி கடவுள் நம்பிக்கையே இல்லை என்று சொல்லிவிட்டுப் போறாரே? என்று நினைத்து மனம் வருந்தினாள்.
அதற்குப் பின் அவளும் அவள் கணவரும் பேருந்தில் பயணிக்கும் நேரம் அவள் கணவருடன் சேர்ந்து பாட்டுக் கேட்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டால்,ஆனால் அவள் கணவனோ எப்போதும் பேருந்தில் ஏறிய அடுத்த நிமிடமே தூங்கி விடுவான். அவளுக்கோ ஏமாற்றமாக இருந்தது. சரி வீட்டிலிருக்கும் போதாவது கணவனுடன் சேர்ந்து பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தால்., அவன் “எனக்குப் பாட்டுக் கேட்பதெல்லம் பிடிக்காது, வேண்டுமென்றால் நாம் இருவரும் சேர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் சீரியல் பார்க்கலாம்” என்று அவளை அழைத்தான் .
அவளும் சரி, ஏதோ தமிழ் சீரியல் போல என நினைத்து ஆர்வத்துடன் இருந்தாள், ஆனால் ஏதோ ஆங்கில மொழியில் “ஃப்ரெண்ட்ஸ் ,ஹவ் ஐ மெட் யுவர் மதர்”என்று ஏதோ ஒரு சீரியலைப் போட்டுக் கொண்டு விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டு ரசித்தான் அவன். அவளுக்கு ஆங்கில அறிவு இருந்தாலும், தமிழ் மொழியில் உள்ள படங்கள் தான் பிடிக்கும். அதனால் அவள் மனதில் “ஏன் இப்படி இதனை ரசித்துப் பார்க்கிறார்? இதில் அப்படி ரசிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றுதான் நினைத்துக் கொள்வாள்.
“ஒருநாள் சினிமாவிற்குப் போகலாம் கிளம்பி ரெடியாக இரு” என்று அவனிடம் இருந்து அழைப்பு வந்தது .உடனே அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாகக் கிளம்பி அவன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். வேலையெல்லாம் முடித்துவிட்டு சாயங்காலமாக வீட்டிற்கு வந்தான் அவன். அதற்குப் பின் இருவரும் சினிமாவிற்கு கிளம்பினார்கள்..
அவளுக்குப் பிடித்த தமிழ் படத்திற்குத்தான் தன் கணவர் கூப்பிட்டுப் போவார் என்று நினைத்து ஆசையோடு காத்திருந்தாள் அவள். ஆனால் அங்கே போய் பார்த்தால், அவன் “அவென்சர்”, “கிவஞ்சர்” னு ஏதோவொரு படத்திற்குக் கூப்பிட்டுப் போனான். இவ்வளவு நாள் தமிழ்ப் படங்களையே விரும்பி பார்த்த அவளுக்கு, அந்த ஆங்கிலப் படத்தின் மேல் அவ்வளவு நாட்டமில்லை. ஆனால் அவனோ அந்தப் படத்தை அவ்வளவு உற்சாகமாகக் கைதட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் அவளுக்கோ அந்த படம் ரொம்ப போரடித்தது. அதனால் தியேட்டரில் அப்படியே தூங்கியேவிட்டாள் அவள்.
இப்படி அவளுடைய ரசனையும், அவனுடைய ரசனையும் தலைகீழாக இருந்ததால், அவள் ‘தன் வருங்காலக் கணவருடன் சேர்ந்து கோவிலுக்கு செல்வது, பாட்டுக் கேட்பது, தமிழில் சினிமா பார்ப்பது என்பன போன்ற தனக்குள் இருந்த எந்தவொரு ஆசையுமே நிறைவேறவில்லையே ?’ என்று மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளானாள் . இப்படி இருவரும் இருவேறு துருவங்களைப் போல் இருந்ததால், போகப் போக இதனால் இருவருக்கும் சண்டை சச்சரவுகளும் வர ஆரம்பித்தது.
இப்படியே போய்க் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் இதுவே இருவருக்கும் பயங்கரமான சண்டையாக மாறக் காரணமாகிவிட்டது. சண்டையின் முடிவில் அவர்கள் இருவரும் சேர்ந்து, “நம் இருவரின் ரசனையும் வேறுவேறாக உள்ளது, அதனால் நமக்கு செட் ஆகாது , அதனால் நாம் டைவர்ஸ் பண்ணிக்கலாம்” என்று முடிவுக்கு வந்துவிட்டனர்.. அதற்குப் பின் அவர்களின் பாட்டி, அவர்கள் இருவரையும் உட்கார வைத்து ஒரு அறிவுரை சொன்னார்.
அது என்னவென்றால், “எப்போதும் திருமணமான தம்பதிகள் இருவரின் ரசனையும் ஒருபோல இருக்காது , கணவரின் ரசனைக்கு ஏற்றார் போல மனைவியும், மனைவியின் ரசனைக்கு ஏற்றார் போல கணவரும் என மாறிமாறி விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அப்படி விட்டுக் கொடுத்து வாழ்வதற்குப் பெயர்தான் காதல், அதுதான் திருமண வாழ்க்கை” என்பதுதான் அந்த அறிவுரை.
அன்றிலிருந்து “பாட்டியின் சொல்லே மந்திரம் “என நம்பி அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் என அவர்கள் இருவரும் தங்களின் ரசனைகளை விட்டுக் கொடுத்து வாழ ஆரம்பித்தார்கள்.
அவனுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் அவளுக்காக அவன் தமிழ் படங்கள், பாடல்கள் கேட்க ஆரம்பித்தான்; அவளும் தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தன் கணவனுக்காக ஆங்கிலப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்; அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் தன் மனைவிக்காக கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தான். இப்படியே ஒருவரின் ரசனையை மற்றவர் மதித்து, மாற்றி மாற்றி விட்டுக்கொடுத்து வாழ ஆரம்பித்தனர்
அப்படியே நாட்கள் போகப்போகத் தன் கணவனுக்குப் பிடித்த ஆங்கில சீரியல்கள், படங்கள் அவளுக்கும்தானாகவே பிடிக்க ஆரம்பித்தது, தன் மனைவிக்குப் பிடித்த தமிழ் பாடல்களை அவனும் விரும்பி ஹெட்செட் போட்டுக்கொண்டு ரசிக்க ஆரம்பித்தான், மனைவிக்காக கோவிலுக்கு செல்ல ஆரம்பித்த அவனுக்குக் காலப்போக்கில் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது .மனைவிக்கு பூ வாங்கி கொடுத்து சேலை கட்டி வர சொல்லி ரசிக்கும் அளவிற்கு மாறிவிட்டான் அவன் ..
இப்படியே இருவரின் ரசனையும் இறுதியில் ஒன்றாக மாறியது! “விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை” என்ற பழமொழிக்கேற்ப “கணவன்,மனைவி இருவரும் இவர்களைப் போல ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறும், அங்கே பிரிவென்ற சொல்லுக்கே இடமில்லை”என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பாட்டி சொல்லிய கருத்தில் எவ்வளவு உண்மை என்பதை அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்புதான் இருவரும் உணர்ந்தனர்.
அவர்கள் குழந்தைகள் இருவருமேகூட வெவ்வேறான விருப்பு, வெறுப்புக்களைதான் கொண்டிருந்தனர். “இப்படி ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளாயினும், ஒரு குழந்தைக்குப் பிடித்த விஷயங்கள், இன்னொரு குழந்தைக்குப் பிடிப்பதில்லை. அப்படி இருக்கும்போது, பெரியவர்களாகிய நமக்கும் வெவ்வேறான ரசனைகள் இருப்பதில் தவறொன்றும் இல்லை..
அதுவும் ஆண்,பெண் இருவரும் வெவ்வேறு இடத்தில பிறந்து, வளர்ந்து திருமண பந்தத்தில் இணையும்பொழுது ,கண்டிப்பாக அவர்களுக்குள் இந்தமாதிரி பிரச்சனைகள் வரதான் செய்யும் “அப்போது எந்த அளவிற்கு நாம் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகின்றோமோ, அந்த அளவிற்கு நம் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்“என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
