நிவேதா எப்போதும் கலகலவென எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பான மங்கை. ஆனால் ஊரடங்கு காலத்தில் அவளது தோழிகள், உறவினர்கள் என யாரையும் பார்க்காமல், யாருடனும் பேசாமல் உற்சாகமில்லாமல் காணப்பட்டாள்.
எப்போதும் சிரித்த முகத்தோடு கலகலவென சிரித்துக் கொண்டிருக்கும் அவளுடைய முகமெல்லாம் தனிமையில் வாடிப்போய் சோர்வாக இருந்தது. அப்போது திடீரென்று அவளுடைய வீட்டுக் கதவை யாரோ தட்டியதுபோல் சத்தம் கேட்டது. “சரி கொரியர் பாய் யாராவது வந்திருப்பார் போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சலித்துக் கொண்டே கதவைத் திறந்தவள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள்.
எப்போதும் தன் பிறந்த நாளைத் தன் உறவினர்களுடன் கொண்டாடும் நிவேதா,இம்முறைக் கொரோனா ஊரடங்கு காரணமாக தனிமையில் வாடிக் கொண்டிருந்தாள். அவள் சிறிதும் எதிர்பாராமல் அவளுடைய அண்ணன், அண்ணி, குழந்தைகள் என எல்லா உறவினர்களும் அவளின் பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொண்டு, வீட்டிலேயே பிறந்தநாள் கேக் செய்து எடுத்து வந்து வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் ஆனந்தத்தில் திகைத்தாள்..
அவள் கதவைத் திறந்தவுடன்,”ஹேப்பி பெர்த் டே நிவேதா!” என்று எல்லோரும் ஒருசேரக் கத்தினர்.அப்போது அவளுடைய பொலிவிழந்த முகமானது ஆனந்தத்தில் பூரித்தது.உடனே நிவேதா”தேங்க் யூ, தேங்க் யூ” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.உடனே தெருவில் நாய் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் காதில் கேட்டு கண் விழித்துப் பார்த்துவிட்டு நடந்தவையெல்லாம் கனவு என்று உணர்ந்தாள்..
அய்யோ! ஆனந்தமான இந்தக் கனவு கலைந்துவிட்டதே! ஒருவேளைத் திரும்பவும் கண்களை மூடிப் பார்த்தால் அதே கனவு தொடருமா? என்ற ஏக்கத்தில் திரும்பவும் தன் கண்களை மூடித் தூங்குவதற்கு முயற்சித்தாள்!! ஆனால் அந்தக் கனவு தொடரவில்லை!! எனவே கனவில் நடந்தவற்றை அவள் தன் கற்பனையில் நிறுத்தி அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்து புன்னகைத்துக் கொண்டாள்!!