செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது என்பது பெரும்பாலானோரும் அறிந்த விஷயம். ஆனால் அதிலும் கூட ஒரு ஷாக்கிங் ஆபத்து இருப்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவில் செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
தினமும் இரவில் செம்பு பாத்திரம் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். காலை வரை அந்த நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது அப்போது, காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது. இது, நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த நீர், உடலில் புதிய மற்றும்ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணைபுரிகிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்தால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அழித்துவிடும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்பர்மோஷன் என்ற நிறுவனம் சோதனை மூலம் நிரூபித்துள்ளது.
சரி, இவ்வளவு பயன்கள் இருக்கும் போது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் குடிப்பதால் ஆபத்து என சொல்கிறீர்களே அது எப்படி என்று தானே கேட்குறீங்க?. செம்பு ப்ளாஸ்க் மட்டும் இல்லீங்க, செம்பு கலந்த பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் அதே செம்பு பாத்திரங்களை முறையாக கழுவி சுத்தப்படுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுமாம்.
செம்பு பாத்திரங்களை கழுவாமல் பயன்படுத்தி வந்தால் பச்சை நிறத்தில் பாசி போல் படர்வதை பார்த்திருப்போம். அது வெறும் கரை கிடையாது. அந்த பச்சை நிறம் ஒரு வகையான கெமிக்கல் பொருள். காப்பர் பாத்திரமானது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்பனேட் (CuCO3) என்ற கெமிக்கலை உருவாக்குகிறது, அதனால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிறம் உருவாகிறது. இந்த காப்பர் கார்பனேட் கெமிக்கல் நீருடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்லும் போது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தர வாய்ப்புள்ளது.
இதை தடுப்பதற்காக தான் நம் முன்னோர்கள் செம்பு பாத்திரத்தை முறையாக புளி, உப்பு, எலும்பிச்சை போன்ற பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்தி பயன்படுத்தி வந்துள்ளனர். சோப்பால் செம்பு பாத்திரங்களை தேய்ப்பதை விட உப்பு, புளி, எலும்பிச்சை போன்றவை சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு செம்பு பாத்திரங்களில் காப்பர் கார்பனேட் படிவதை தவிர்க்க உதவுகிறது. அதுவும் நீங்கள் செம்பு ப்ளாஸ்க்கில் நீர் அருந்துபவராக இருந்தால், பாட்டிலின் அடிபாகம் வரை நன்றாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்வது மிக, மிக அவசியம்.