பாஜக மாநில நிர்வாகிகள் அறிவிப்பு, குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில பொதுச் செயலாளர்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நியநியமிக்கப் பட்டுள்ளார்கள். மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரனும், மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளார். மாநில பொறுப்புகளுக்கு தான் பட்டியல் வந்துள்ளது. விரைவில் தேசிய தலைவர் நட்டா மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் தேசிய பொறுப்புகளில் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும், தேசிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என்றால் அடுத்தகட்ட முடிவினை எடுக்க உள்ளதாக விஜயதாரணி தகவல் தெரிவித்துள்ளார்.