“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை”-ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது”  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த,  கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி – விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் –  மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது  கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது!

சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பியவுடன் இலங்கைக் கடற்படை நான்கு மீனவர்களைக் கொன்றிருப்பது, இலங்கையில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, இந்திய மத்திய அரசையோ துளி கூட மதிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது. எனவே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு,  பிரதமர் திரு. நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version