இந்தி தெரியாததால் வங்கிக்கடன் வழங்காத விவகாரத்தில், தமிழர் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூரில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு இந்தி தெரியாததால் வங்கிக்கடன் வழங்க முடியாது என, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கூறியதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்றபோது, இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.
இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பா.ஜ.க. அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?. எச்சரிக்கை
எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.
சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு. எச்சரிக்கை. என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
